எருதாட்ட விழாவில் மாடு முட்டி 10ஆம் வகுப்பு மாணவன் பலி!!
எருதாட்ட விழாவில் மாடு முட்டி 10ஆம் வகுப்பு மாணவன் பலி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எருதாட்ட விழாவில் காளைமாடு முட்டி 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் திருவிழாவையொட்டி சப்படி கிராமத்தில் எருதாட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.
விழாவை காண 2 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு கூடியிருந்தனர். அதில் ஒருவர் கானலட்டி கிராமத்தை சேர்ந்த செம்பப்பா - ரேணுகா தம்பதியின் மகன் திவாகர்.

இவர் அட்டகுறுக்கி கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்றவர், நண்பர்களோடு பள்ளியிலிருந்து வெளியேறி சப்படி கிராமத்தில் நடைபெற்ற எருதாட்டம் விழாவை காண சென்றார்.
அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைமாடு ஒன்று மாணவன் திவாகரை முட்டி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் மாணவர் திவாகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

