ஆபத்தில் 110 நாடுகள்.. கொரோனாவில் அலட்சியம் வேண்டாம் என எச்சரிக்கை !!
ஆபத்தில் 110 நாடுகள்.. கொரோனாவில் அலட்சியம் வேண்டாம் என எச்சரிக்கை !!

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு சற்று ஓய்வெடுத்தது. அதாவது, கொரோனா குறைந்தது. இதனால் பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா பரவி வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் நிலவும் தற்போதைய கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனாம் தனது அறிக்கையில் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் நாம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். வைரஸை கண்டறிவதில் நாம் சிறப்பான திறன் கொண்டுள்ள நிலையில், புதிதாக உருமாறும் தொற்றுகளை விரைவாக ஆய்வு செய்வது சற்றே கடினமாக உள்ளது. எனவே, பெருந்தொற்று ஓய்ந்து விட்டது என நாம் இருந்துவிடக்கூடாது.

BA.4 மற்றும் BA.5 வகை கோவிட் தொற்றுகளால், சுமார் 110 நாடுகளில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக உலகளவில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழப்புகளும் மொத்தம் உள்ள ஆறு கண்டங்களில் மூன்று கண்டங்களில் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் வேகம் மிகக் குறைவாக உள்ளது.

இந்த காலத்தில் அனைத்து நாடுகளும் தங்கள் மக்கள்தொகையில் சுமார் 70 சதவீத பேருக்காவது தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கடந்த 18 மாதங்களில் சுமார் 120 கோடி தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக உலகின் 75 சதவீத சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திவிட்டனர்.

2 கோடி உயிர்கள் தடுப்பூசி காரணமாக காக்கப்பட்டுள்ளதாக லென்செட் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. அதேவேளை,பலகோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அபாய நிலையில் உள்ளனர்.70 சதவீத இலக்கை 58 நாடுகள் எட்டியுள்ள நிலையில், குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் சராசரியாக 13 சதவீத தடுப்பூசியே செலுத்தியுள்ளது, என்று கவலை தெரிவித்துள்ளார்.
newstm.in

