14 வயது சிறுமி மீது ஒருதலைக்காதல்.. தூங்கிக்கொண்டிருந்த போது குடும்பத்தோடு கடத்திச் சென்ற இளைஞர்..!
14 வயது சிறுமி மீது ஒருதலைக்காதல்.. தூங்கிக்கொண்டிருந்த போது குடும்பத்தோடு கடத்திச் சென்ற இளைஞர்..!

சேலம் மாவட்டம் ஆருர்பட்டியில் 14 வயது சிறுமியை, குடும்பத்தோடு வந்து கடத்திச் சென்ற வாலிபரை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலம் ஒன்றியம் சேடப்பட்டி ஊராட்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (40). இவர் அதே பகுதியில் தையல் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா 36 இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும் 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சௌந்தரராஜன் 24 என்ற வாலிபர், ஜெய்கணேஷின் மகளான பள்ளி சிறுமியை அவ்வப்போது கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். மேலும் சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 5 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஜெய்கணேஷின் மகள் தூங்கிக்கொண்டு இருந்தபோது சௌந்தரராஜன், அவரது தந்தை சின்னகண்ணன், தாய் பழனியம்மாள், உறவினர் சித்தன் உள்ளிட்ட 4 பேரும் மாணவியின் வீட்டுக்கு வந்து அவரை தூக்கிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். கடத்தி செல்லப்பட்ட சிறுமியை சௌந்திரராஜனுக்கு திருமணம் செய்துவைக்க இளைஞரின் பெற்றோர் முடிவு செய்தனர். புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் தேடிவந்தனர். தொடர்ந்து ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சௌந்தரராஜனை கைது செய்த போலீசார் பள்ளி மாணவியை மீட்டனர்.
தொடர்ந்து பள்ளி மாணவியை கடத்தி சென்ற இளைஞரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஓமலூர் அருகே 14 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்ய கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in


