விபரீத முடிவு எடுத்த 15 வயது செல்ல மகள்.. படிக்க சொன்னது குத்தமாம்மா?
விபரீத முடிவு எடுத்த 15 வயது செல்ல மகள்.. படிக்க சொன்னது குத்தமாம்மா?

அலங்காநல்லூர் அடுத்த குலமங்கலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையில் அவர், சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த திருவான்மியூரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி என்பது தெரியவந்தது. அவர் எழுதி வைத்திருந்த 11 பக்க கடிதம் மூலம் இந்த மரணத்தின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
சென்னை டிராவல்ஸ் அதிபரின் 15 வயது செல்ல மகளான அந்த மாணவி பிரபல தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சில மாதங்களாக படிப்பில் பின் தங்கிய மாணவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. படிப்பை மறந்த மாணவி காதலில் விழுந்துள்ளார். இதனை பெற்றோர் கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால் காதலை கைவிட்டதாக மாணவி பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.
ஆனால் அதன் பின்னரும் தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால், பெற்றோர் அவரை சந்தேகப்பட்டு மீண்டும் சத்தம் போட்டுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி பேருந்து மூலம் திருச்சி சென்றுள்ளார்.
அங்கு ஒரு பூ வியாபாரியிடம் செல்போனை இரவல் வாங்கி தனது தாயிடம் உருக்கமாக பேசிய மாணவி, தான் மட்டும் தனியாக தான்ஊரைவிட்டு வந்துள்ளதாகவும் எக்காரணம் கொண்டும் தனது காதலனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.
போனை கொடுத்து விட்டு சென்ற பின்னர் அந்த பூ வியாபாரிக்கு போன் செய்த மாணவியின் தாய், தனது மகள் வீட்டில் இருந்து ஓடி வந்து விட்டாள் பிடித்து போலீசில் ஒப்படையுங்கள் என்று கதறி அழுதுள்ளார். உடனடியாக அவர், அந்த மாணவியை விரட்ட, அந்த வழியாக மதுரை நோக்கிச்சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் ஓடிச்சென்று ஏறி தப்பி உள்ளார்.
நடந்த விவரத்தை அறிந்து மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்து போலீஸ் உதவியுடன் மாணவியை தேடி திருச்சிக்கு சென்றனர். இதற்கிடையே மதுரையில் இறங்கிய மாணவி ஆட்டோ ஒன்றில் ஏறி தான்வைத்திருந்த ஸ்மார்ட் போனில் கூகுல் மேப் பார்த்துக் கொண்டே தான்சொல்லும் முகவரிக்கு செல்லுங்கள் என்று கூறி உள்ளார்.
ஆட்டோ மீட்டரில் சுமார் ரூ. 850 வரும் வரை ஊர், ஊராக சுற்றியுள்ளார். அலங்காநல்லூர் அடுத்த குலமங்கலத்தில் புதிதாக கட்டுமானம் நடைபெற்று ஆள் அரவமற்று காணப்பட்ட வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்திய அந்த மாணவி, தனது சகோதரர் வந்து அழைத்துச்செல்வார் என்று கூறி ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டார்.
அதன் பின்னர் வீட்டிற்குள் சென்று துப்பட்டாவால் தூக்கிட்டு விபரீத முடிவை தேடிக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

