விபத்தில் 22 பயணிகள் பலியான சோகம்- பேருந்து டிரைவருக்கு 190 ஆண்டுகள் ஜெயில் !!
விபத்தில் 22 பயணிகள் பலியான சோகம்- பேருந்து டிரைவருக்கு 190 ஆண்டுகள் ஜெயில் !!

மத்தியபிரதேச மாநிலம் மதலா மலைப்பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 65 பயணிகள் பயணம் செய்தனர். பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள்.
இந்த பேருந்தை சம்சுதீன் (47) என்பவர் ஓட்டிச் சென்றார். ஆபத்தான மலைப்பாதைதயில் சம்சுதீன் பேருந்தை தாறுமாறாக ஓட்டியதாகவும் பயணிகள் கூறியும் கேட்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத கால்வாய்க்குள் கவிழ்ந்து தீப்பிடித்தது.

இதனால் பயணிகள் அவசர வழியாக வெளியேற முயன்றனர். ஆனால் அந்த கதவில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டு இருந்ததால் திறக்க முடியவில்லை. இந்த விபத்தில் தீயில் கருகி 22 பயணிகள் பலியானார்கள். ஏராளமானோர் தீக்காயம் அடைந்தனர். ஓட்டுநர் சம்சுதீன் தப்பினார்.

இச்சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச மாநில நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பேருந்தை தாறுமாறாக ஓட்டிச் சென்று 22 பேர் பலி வாங்கியதால் டிரைவர் சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதேபோல் பேருந்து உரிமையாளர் ஜிதேந்திர பாண்டேவுக்கு 19 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
newstm.in

