சரவணா ஸ்டோரின் கோல்டு பேலஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.235 கோடி சொத்துக்கள் முடக்கம்..!!
சரவணா ஸ்டோரின் கோல்டு பேலஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.235 கோடி சொத்துக்கள் முடக்கம்..!!

சரவணா ஸ்டோர்ஸ் 1970 செப்டம்பர் 4 அன்று சென்னை, தி நகரில் ஒரு பாத்திரக் கடையாக மட்டும் துவக்கப்பட்டது. இது சிறிதுசிறிதாக வளர்ந்து வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்கும் அங்காடியாக 1998-ல் உருவானது. இந்த நிறுவனமானது சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர், பாடி, சோழிங்கநல்லூர் மற்றும் உஸ்மான் சாலை என 7 இடங்களில் கடைகள் இயங்கி வருகின்றன.

இந்நிறுவனமானது மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவையில் மிகப்பெரிய கடைகளைக் கொண்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இந்த நிறுவனமானது மும்பை, தில்லி மற்றும் பெங்களூரில் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் சரவணா செல்வரத்தினம் கடைகளையும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு இரண்டு அணிகளாக பிரிந்து சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வரி ஏய்ப்பு செய்த பல கோடி ரூபாய் பணத்தை தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்ததால் இந்த சோதனை நடைபெற்றது. அதில், சரவணா ஸ்டோர் தொடர்பான இடங்களில் கடந்த 7 ஆண்டுகளாக விற்பனை செய்த கணக்கில் 1,000 கோடி ரூபாயை மறைத்து ஆவணம் செய்தது தெரியவந்தது. மேலும், ஜவுளிப் பிரிவு மற்றும் நகைப் பிரிவில் கடந்த சில ஆண்டுகளில் 150 கோடிக்கு கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டது வரவு வைக்காததும் தெரியவதுள்ளது. மேலும், 80 கோடிக்கு போலி பில் போட்டதும் அம்பலமானது.
இந்நிலையில், இன்று சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.234.75 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கியதாக அமலாக்கத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

