காருக்குள் விளையாடிய குழந்தைகள் 3 பேர் மூச்சுத்திணறி பலி!!
காருக்குள் விளையாடிய குழந்தைகள் 3 பேர் மூச்சுத்திணறி பலி!!

நெல்லை மாவட்டத்தில் காரின் உள்ளே சென்று விளையாடியபோது, கதவை திறக்க முடியாததால் குழந்தைகள் 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணகுடி அருகே லெப்பைக் குடியிருப்பை சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டரான நாகராஜன் என்பவரின் மகன் நித்திஷ்(7) மகள் நிதிஷா(5) மற்றும் அவரது உறவினர் சுதன் என்பவரது மகன் கபிலன் (4) ஆகியோர் வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.
காரின் கதவைத்திறந்து உள்ளே சென்று விளையாடி கொண்டிருந்தபோது, அவர்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 3 நாட்களாக கார் அங்கேயே நிற்கும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அதிக உஷ்ணம் காருக்குள் இருந்துள்ளதோடு ஆக்சிஜன் குறைவாக இருந்துள்ளது.

இதனால் குழந்தைகள் தோலில் காயம் ஏற்பட்டுள்ளது . உஷ்ணம் தாங்காமல் காரை விட்டு வெளியே வர நினைத்து குழந்தைகள் கதவை திறக்க முயன்றபோது முடியாத நிலையில் வாந்தி எடுத்து, மூச்சுத்திணறி மயங்கினர்.
30 நிமிடங்களாக அவர்கள் காரை விட்டு வெளியே வர போராடியுள்ளனர். குழந்தைகளின் கைரேகை கார் கண்ணாடியில் பதிவாகியுள்ளது. வெகு நேரமாக குழந்தைகளை காணாமல் தேடிய பெற்றோர் குழந்தைகள் காருக்குள் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

