ஒரு வாரத்தில் பள்ளியின் மாடியில் இருந்து குதித்த 3 மாணவர்கள்!!
ஒரு வாரத்தில் பள்ளியின் மாடியில் இருந்து குதித்த 3 மாணவர்கள்!!

தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் பள்ளி மாணவர்கள் 3 பேர் பள்ளி வளாகத்திலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி, அமரம் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி கோகிலாவாணி மேச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவி, வகுப்பறையில் தனது புத்தகப் பையை வைத்துவிட்டு, பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இஷிகாந்த் (வயது 16) +1 வகுப்பில் பயின்று வருகிறார்.
இஷிகாந்த் பள்ளியின் 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தார். காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்கட்ட விசாரணையில் பள்ளி ஆசிரியர் மாணவனை அடித்ததால் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி கடந்த 7 நாட்களில் மட்டும் 3 மாணவ, மாணவிகள் பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
newstm.in

