ஜூலை 1 முதல் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
ஜூலை 1 முதல் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அக்கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16-ம் தேதி முறைப்படி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப்புக்கு வந்தபோது, “நாங்கள் ஆட்சி அமைத்தால் இலவச மின்சார விநியோக திட்டம் அறிமுகப்படுத்தப்படும்” என தனது முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்.

இந்த சூழலில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. இதனை முன்னிட்டு, பஞ்சாப்பில் உள்ள உயரதிகாரிகளிடம் இலவச மின்சார விநியோக திட்டம் நிறைவேற்றம் பற்றி கெஜ்ரிவால் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதில், பஞ்சாப் மாநில மின் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தொடர்பு கொண்டு பேசியது முதல், மின் கட்டண தொகையை ஏற்பது, இந்த திட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு விட கூடாது என்பது வரை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், வரும் 16-ம் தேதி (இன்று) இத்திட்டம் பற்றி பஞ்சாப் மக்களுக்கு மிக நல்ல செய்தி கிடைக்கும் எனக் கூறினார்.
பஞ்சாப்பில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கான இலவச மின் விநியோகம் இருந்து வருகிறது. இத்திட்டத்தின்படி, எஸ்சி, பிசி பிரிவினர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்று வருகின்றனர்.
ஆம் ஆத்மியின் இலவச மின் விநியோக திட்ட உறுதிமொழியின்படி, பொருளாதார வேற்றுமையின்றி, அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
இதனால், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற்று வருவோர் அனைவரும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவார்கள். 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மேற்குறிப்பிட்ட வகையினர், கூடுதல் யூனிட்டுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

இதுவரை மின்சார பலன்கள் பெறாத மற்ற அனைவரும் மாதத்திற்கு 300 யூனிட்டுகளை இனி பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், மாதம் ஒன்றுக்கு 300 யூனிட்டுகளுக்கு கூடுதலாக மின் நுகர்வு ஏற்பட்டால், அவர்கள் மொத்த மின் உபயோகத்திற்கான கட்டணமும் செலுத்த வேண்டும்.
அதன்படி, பஞ்சாப்பில் வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு இன்று அறிவித்துள்ளது. இன்றுடன் பகவந்த் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்த சூழலில், அரசின் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

