நம்மைக் காக்கும் 48 திட்டம்.. அரசாணையின் முழு விவரம்..!
நம்மைக் காக்கும் 48 திட்டம்.. அரசாணையின் முழு விவரம்..!

தமிழக எல்லைக்குள் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கும் நடைமுறைக்கு அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 18-11-2021 அன்று தலைமைச் செயலகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்தும், சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலை உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், சாலைகளின் வடிவமைப்பு குறித்தும், காவல்துறை உள்ளிட்ட பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சி அளிப்பது, சாலை விபத்துகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இயற்றுவது, புதிய தொழில் நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்தும் முதலமைச்சர் விரிவாக இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு, அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, ஆய்வுசெய்து, விபத்துகளைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
மேலும், சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில், ‘நம்மைக் காக்கும் 48’ அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கட்டணமில்லா மருத்துவ உதவித் திட்டத்தினைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளார்.
இத்திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உள்கட்டமைப்புகளுடன் கூடிய இதர தனியார் மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தில் பின்வரும் நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என அனைவரும் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
தமிழக எல்லைக்குள் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகில் உள்ள அண்டை மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரும்போது, மருத்துவமனை இத்திட்டத்தின்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இலவச சிகிச்சை வழங்கும்.
உத்திரவாத அடிப்படையில் செலவினங்கள் கணக்கீடு செய்யப்பட்டு அந்த கட்டமாக ரூபாய் 50 கோடி நிதி இத்திட்டத்திற்கு என ஒதுக்கப்படும்.
ஒரு நபருக்கு ரூபாய் 1 லட்சம் வரை செலவினத்தில் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகளை இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.
தேச குறைப்பு அடிப்படையில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் ஆவன செய்யப்பட்டுள்ளது.
12 மாத காலத்திற்கு இத்திட்டம் உத்தரவாதம் முறையில் செயல்படுத்தப்பட்டு, அதன்பிறகு வருடாந்திர செலவினம் மதிப்பாய்வு செய்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இத்திட்டத்தினை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளிலேயே முதல் நாற்பத்தி எட்டு
மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம்’ என அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

