5ஆவது டெஸ்ட் போட்டி.. இங்கிலாந்து வெற்றிபெற 378 ரன்கள் இலக்கு !!
5ஆவது டெஸ்ட் போட்டி.. இங்கிலாந்து வெற்றிபெற 378 ரன்கள் இலக்கு !!

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ் சதம் அடித்து அசத்தினார்.
இதை தொடர்ந்து இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸ்சை தொடங்கியது. 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து இருந்தது. இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா 66 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷ்ரேயஸ் ஐயர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த பண்ட் 2ஆவது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
4ஆவது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து இருந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு மளமளவென விக்கெட்கள் சரிய தொடங்கியது. ஜடேஜா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 2ஆவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன் மூலம் இந்த போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணி இலக்கை நோக்கி பேட்டிங்செய்து வருகிறது.
newstm.in