புதுச்சேரியில் 6½ அடி உயர பாரதியார் சாக்லேட் சிலை: செல்பி எடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி..!
புதுச்சேரியில் 6½ அடி உயர பாரதியார் சாக்லேட் சிலை: செல்பி எடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி..!

பாரதியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி புதுச்சேரியில் அவருக்கு 6½ அடி உயர சாக்லெட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை வியந்து பார்த்து பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வரும் சாக்லேட் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களை கவரும் வகையில் சாக்லேட் தயாரித்து கலைத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன், திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரது உருவங்களை சாக்லேட்டால் வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது, மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலையை 6.6 அடி உயரத்தில் சாக்லேட்டால் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
அந்த சிலையில் பாரதியின் வரிகளான ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதை அந்த வழியாக வந்து செல்லும் பொதுமக்கள் பார்த்து ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். பாரதியாரின் சாக்லேட் சிலை அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
இந்த சாக்லெட் சிலையை வடிவமைத்தது குறித்து ராஜேந்திரன் கூறுகையில், “கிறிஸ்துமஸ் மற்றும் 2022 புத்தாண்டையொட்டி நூற்றாண்டு கண்ட புரட்சிக் கவிஞர் பாரதியாரை கவுரவிக்கும் வகையிலும், அவரை அனைத்து இளையோரிடம் கொண்டு செல்லும் நோக்கத்திலும் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதில் உதித்தது தான் இந்த சிலை. அதாவது, 482 கிலோ சாக்லேட் கொண்டு 6.6 அடி உயரத்தில் பாரதியார் சிலையை வடிவமைத்தேன். நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை வடிவமைக்க 106 மணி நேரம் ஆனது” என்றார்.

