சென்னையில் 8 மாத பெண் குழந்தை கடத்தல்.. தாயுடன் உறங்கியப்போது பெண் துணிகரம்!!
சென்னையில் 8 மாத பெண் குழந்தை கடத்தல்.. தாயுடன் உறங்கியப்போது பெண் துணிகரம்!!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) - சினேகா(23) தம்பதியருக்கு 8 மாதத்தில் ராஜேஸ்வரி என்ற கைக்குழந்தை உள்ளது. இவர்கள் பிழைப்புக்காக ஊர் ஊராகச் சென்று ஊசிமணி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பாட்ஷா கும்பகோணத்திலும், சினேகா விக்ரவாண்டியில் உள்ள தாயார் வீட்டிலும் வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் கணவன் மனைவி இருவரும் சமாதானம் ஆகி கடந்த வாரம் இருவரும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்து ஊசிமணி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் சில தினங்களுக்கு முன்பாக சினேகா தனது 8 மாத குழந்தையான ராஜேஸ்வரியுடன் சொந்த ஊரான விக்ரவாண்டி சென்று நேற்று(பிப்.27) காலை சென்னை திரும்பி வந்துள்ளார்.
அன்று இரவு பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள ஸ்கேட்டிங் போர்ட் மைதானத்தில் தனது கைக் குழந்தையுடன் சினேகா உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அதிகாலை 3 மணிக்கு சினேகா தூக்கத்திலிருந்து எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது கணவர் தான் குழந்தையை எடுத்திருப்பார் என அவரிடம் கேட்டபோது அவர் எடுக்கவில்லை என கூறியுள்ளார். இதனால் தனது உறவினர்களுடன் கடற்கரை முழுவதும் குழந்தையைத் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் குழந்தையின் தாய் சினேகா சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு பெண் எட்டு மாத கைக்குழந்தையான ராஜேஸ்வரியைத் தூக்கிக் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் குழந்தையைக் கடத்திய பெண் செல்லும் பாதையில் உள்ள அனைத்து சாலைகளிலும் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
newstm.in


