ஒரு வயது குழந்தை ரூ.2.30 லட்சத்திற்கு விற்பனை.. தாய் உட்பட 9 பேர் கைது..!
ஒரு வயது குழந்தை ரூ.2.30 லட்சத்திற்கு விற்பனை.. தாய் உட்பட 9 பேர் கைது..!

விருதுநகர் மாவட்டம் செவல்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (25). கணவரை இழந்து இவர் தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கலைச்செல்வியின் குழந்தை காணவில்லை என கூறப்பட்டது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், சைல்டு லைன் அமைப்பின் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விஏஓ சுப்புலட்சுமி மற்றும் சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கலைச்செல்வியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது பெண் குழந்தையை 2.30 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி ஒரு கும்பலிடம் விற்றதாக கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதையடுத்து சூலக்கரை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது, திருமண புரோக்கர்களாக இயங்கி வந்த கும்பல் ஒன்று குழந்தையை விலைக்கு வாங்கி மதுரையில் உள்ள குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு விற்றது தெரியவந்தது.
மேலும் குழந்தை விற்பனையில் மதுரை, கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த பலர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து மதுரைக்கு விரைந்த தனிப்படை போலீசார், ஜெய்ஹிந்த் புரத்தில் இருந்த குழந்தையை மீட்டனர்.
இது குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் தாய் கலைச்செல்வி, குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதிகளான மதுரையைச் சேர்ந்த கருப்பசாமி - பிரியா, பிரியாவின் தந்தை கருப்பசாமி, குழந்தையை விலைக்கு வாங்கி விற்ற மகேஸ்வரி, மாரியம்மாள், இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கார் ஓட்டுநர்கள் சிவகாசியை சேர்ந்த கார்த்திக், செண்பகராஜன் மற்றும் புரோக்கர் நந்தகுமார் ஆகியோரை இன்று அதிகாலை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து இரண்டு சொகுசு கார்களையும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story

