செல்பி-க்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஐடி பெண் ஊழியர்..!!
செல்பி-க்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஐடி பெண் ஊழியர்..!!

கர்நாடக மாநிலம் பெங்களுரூவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் திருப்பதி பகுதியைச் சேர்ந்த கட்டா வினிதா சவுத்ரி (26).
இந்த நிலையில் வார விடுமுறையை பொழுதுபோக்குடன் கழிப்பதற்காக மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல கட்டா வினிதா சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று கட்டா வினிதா சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் ஊட்டிக்கு வந்தனர். அங்கு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட பல்வேறு இடங்களை கண்டு ரசித்த அவர்கள், கல்லட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு சென்று ஒய்வு எடுத்தனர். பின்னர், நேற்று மாலை கட்டா வினிதா சவுத்ரி தனது நண்பர்களுடன் கல்லட்டி ஆற்றை பார்க்க சென்றனர். கல்லட்டி சாலையில் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ஆற்றின் கரையோரம் இருந்த கல்லில் அமர்ந்தபடி ஆற்றின் அழகினையும், தண்ணீர் பாய்ந்து செல்வதையும் கண்டு ரசித்தனர்.

பின்னர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து செல்பி புகைப்படம் எடுத்த போது எதிர்பாராத விதமாக கட்டா வினிதா சவுத்ரி கல்லட்டி ஆற்றுக்குள் தவறி விழுந்தார். மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கல்லட்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கட்டா வினிதா சவுத்ரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுமந்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் மற்றும் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான போலீசார் ஆற்றுக்குள் இறங்கி இளம்பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து இரவு நேரமானதாலும், ஆற்றில் வெள்ளம் அதிகமாக வருவதாலும் தேடும் பணியை போலீசார் நிறுத்தினர். இன்று காலை 2-வது நாளாக அந்த பெண்ணை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கல்லட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து செல்லும் கல்லட்டி ஆறு சீகூர் வனப்பகுதி வழியாக சென்று பவானி சாகர் அணையை அடைகிறது. இதனால் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் 2 குழுவாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு குழுவினர் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து, ரேய்சன் வேலி வரையிலும், மற்றொரு குழுவினர் பர்சன்வேலியில் இருந்து வாழைத்தோட்டம் பகுதி வரையிலும் ஆற்றுப்பகுதி, கரையோரங்களில் தேடினர். இந்த நிலையில் கட்டா வினிதா சவுத்ரி பிணமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டா வினிதா சவுத்ரியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சுற்றுலா பயணிகளை தடையை மீறி விடுதி நிர்வாகம் கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விடுதியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே கல்லட்டி சாலையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுலா வந்த நெல்லையை சேர்ந்த ஐடி பெண் ஊழியர் உயிரிழந்தார். இந்தநிலையில் மற்றொரு ஐடி பெண் ஊழியர் ஆற்றுக்குள் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

