மதுரையில் அதிமுக பெண் வேட்பாளர் கடத்தல்? அடுத்தடுத்து குவியும் புகார் !!
மதுரையில் அதிமுக பெண் வேட்பாளர் கடத்தல்? அடுத்தடுத்து குவியும் புகார் !!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கி அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் நெருங்கிய உறவினர்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை சக வேட்பாளர் கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 29 ஆவது வார்டில் அதிமுக சார்பில் ராதிகாவும், திமுக சார்பில் கீதாவும் போட்டியிடுகிறார்.
திமுக வேட்பாளர் கீதா தரப்பினர் தனது கணவரை கடத்தி இருக்கலாம் என, அதிமுக வேட்பாளர் ராதிகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவரை யார் கடத்தினர், அவர் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை.

இதேபோல், மதுரையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, மதுரை வாடிப்பட்டி பேரூராட்சி 9ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் இந்திராணி கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளரை மிரட்டி கடத்தி சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் கட்சியினர் வாடிபட்டியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை மூன்று மணி வரை வேட்புமனுக்களை திரும்பபெற கால அவகாசம் உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

