விபத்தில் உயிரிழந்த ரசிகர்.. குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் ஜெயம் ரவி உறுதி..!
விபத்தில் உயிரிழந்த ரசிகர்.. குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் ஜெயம் ரவி உறுதி..!

விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர் மன்ற தலைவர் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி, குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.
மதுரை நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜெயம் ரவியின் தீவிர ரசிகராகவும், அவரது ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் செந்தில் உயிரிழந்தார்.
இதனிடையே, தனது புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் இருந்த நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகரின் மறைவு குறித்து செய்தி அறிந்து நேற்று மாலை மதுரை நிலையூரில் உள்ள செந்திலின் வீட்டுக்கு நேரில் சென்றார். செந்திலின் மனைவி மற்றும் இரு குழந்தைகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், செந்திலின் குடும்ப வறுமையை போக்க 5 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், இரு குழந்தைகளுக்கான கல்விச் செலவை முழுமையாக ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.