அட்டகாசம் தாங்க முடியலை.. உடனே ஆக்ஷன் எடுங்க.. அரசுக்கு பெற்றோர் கோரிக்கை..!
அட்டகாசம் தாங்க முடியலை.. உடனே ஆக்ஷன் எடுங்க.. அரசுக்கு பெற்றோர் கோரிக்கை..!

தமிழகத்தில் சில மாதங்களாக, பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வகுப்பறையில் அடாவடித்தனத்த்தில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், ஐந்து மாணவர்கள் ஒன்றாக சேர்த்து ஒரு ஆசிரியரை கேலி செய்தது, கஞ்சா போதையில் ஒரு மாணவன் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை மிரட்டுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர், சக மாணவர்களை துடைப்பத்தால் தாக்கியதுடன், ஃபேன் மற்றும் சுவிட்ச் போர்டை சேதப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஆசிரியர்கள் வட்டாரத்தில் கூறுகையில், ‘மாணவர்களை கண்டித்தால் அவர்கள் அடியாட்களுடன் வந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை மிரட்டுகின்றனர்.
காலையில் வருகை பதிவேடு கொடுத்துவிட்டு பள்ளியின் சுற்றுச் சுவரை தாண்டி சென்று போதை பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகி உள்ளனர்’ என்று வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் செய்யும் அநாகரீக செயல்களின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகள் மீது மக்கள் மத்தியில் ஒரு அவநம்பிக்கையும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே, தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும், மாணவர்களை ஒழுக்கப்படுத்தும் முயற்சிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

