அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.. டிஜிபிக்கு வீடியோ அனுப்பிய காவலர்
அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.. டிஜிபிக்கு வீடியோ அனுப்பிய காவலர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கோடாரியேந்தல் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவர், கடந்த 2016ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது மதுரை பட்டாலியனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் பணியில் சேருவதற்கு முன்னதாக அவர், டி.ஜி.பி சைலேந்திரபாபுவை சந்திக்க நேரம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், நேரம் கிடைக்காததால் காவலர் கனகராஜ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், காவல்துறை என்பது ஒரு குடும்பம் போன்றது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த நான். எனது குடும்பம் குறித்த தகவலை ஒட்டுமொத்த போலீசாரின் தந்தையாகிய தங்களிடம் தெரிவிக்க பலமுறை முகாம் அலுவலகத்திற்கு வந்து உள்ளேன்.

ஆனால் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி சந்திக்க விடாமல் தடுத்து விடுகின்றனர். எனவே எனது நிலையை எடுத்துக் கூற நேரம் ஒதுக்கி தரவேண்டும் என்று கூறி, கடைசி ஆயுதமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன், என தெரிவித்துள்ளார்.
வீடியோ வெளியிட்ட கனகராஜ் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் அவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது.
கனகராஜின் மனைவி முருகவள்ளி ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் கனகராஜ் மீது முருகவள்ளி புகார் அளித்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பஜார் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய ரஞ்சித்திடம், கனகராஜ் செல்போனில் வாக்குவாதம் செய்த ஆடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது டி.ஜி.பி சைலேந்திரபாபுவை சந்திக்க அனுமதி கேட்டு கனகராஜ் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in

