BREAKING: மக்கள் புரட்சிக்கு பயந்து இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய தப்பியோட்டம்
BREAKING: மக்கள் புரட்சிக்கு பயந்து இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய தப்பியோட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மறுபுறம் என அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர்.
போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அதிபரின் வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர்.
போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் பதவியை ரனில் விக்ரமசிங்கே மற்றும் 2 அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வார் என நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா கூறியிருந்தார்.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே கடற்படை முகாம் தளத்தில் தங்கியிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதிபர் கோத்தபயா இலங்கையில் இருந்து வெளியேறியதாக நேற்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் அது உண்மையில்லை என்றும் கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார். இதற்கிடையில் இலங்கையின் இடைக்கால அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என தகவல் வெளியானது. அவர் ஜூலை 13ஆம் தேதி (இன்று) தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு கோத்தபய ராஜபக்சே கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளார் என கூறப்பட்டது. இலங்கையின் முன்னாள் நிதி நிதியமடைச்சரான பசில் ராஜபக்சே, அந்நாட்டில் இருந்து தப்பி துபாய்க்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக புறப்பட்ட அவரை விமான நிலையத்தில் அடையாளம் கண்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, அவர் விமான நிலையத்தில் இருந்து திரும்பி இலங்கையிலேயே தங்கினார். இந்த சூழலில், கோத்தபய ராஜபக்சே விமானத்தில் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி, பாதுகாவலர் ஒருவர் என மொத்தம் 4 பயணிகளுடன் இன்று அதிகாலையில் அண்டை நாடான மாலத்தீவுக்கு தப்பி சென்று விட்டார் என கூறப்படுகிறது.
சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆன்டனோவ்-32 ரக விமானத்தில் அவர்கள் அனைவரும் பயணித்து உள்ளனர். விமான படையின் சிறப்பு விமானத்தில் அவர்கள் புறப்பட்டு சென்றனர். அவர்களது பாஸ்போர்ட்டுகளில் சீல் வைக்கப்பட்டு உள்ளன என பெயர் வெளியிட விருப்பம் இல்லாத குடியுரிமை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
newstm.in