ஆடு மேய்க்க சென்ற சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி பலி!!
ஆடு மேய்க்க சென்ற சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி பலி!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் ஆடு மேய்க்கச் சென்ற 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈன்றபாளையம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சிரளபாக்கம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் விக்கி என்ற கோகுல் (14) சென்றிருந்தார். 9ஆம் வகுப்பு படிக்கும் கோகுலும் அதேப்பகுதியை மற்றொரு 14 வயது சிறுவனான ரித்தீஷ் இருவரும் ஆரணி ஆற்றில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர்.
ஆடுகளை கரையில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மேலும் சில நண்பர்களுடன் சிறுவர்கள் இருவரும் ஆற்று நீரில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் இருவரும் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஊத்துக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். போலீஸார் சிறுவர்களின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வருவதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
newstm.in

