விபத்தில் சிக்கி மூளைச்சாவு.. 4 பேருக்கு மறுவாழ்வு.. நெகிழ வைத்த 11 வயது சிறுமி..!
விபத்தில் சிக்கி மூளைச்சாவு.. 4 பேருக்கு மறுவாழ்வு.. நெகிழ வைத்த 11 வயது சிறுமி..!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியைச் சேர்ந்த நய்னா தாக்கூர் என்ற 11 வயது சிறுமி கடந்த 3-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், மார்ச் 7-ம் தேதி அந்தச்சிறுமி மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் குடும்பம், அவரது உறுப்புகளை தானம் செய்து நான்கு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.
அந்த சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் பொருத்தமான நபர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதே நேரத்தில், மாற்று அறுவை சிகிச்சையின்போது அவரது கருவிழிகள், இரண்டு பார்வையற்றோருக்கு தானமாக அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை தலைவர் டாக்டர் விபின் கவுஷல் கூறுகையில், “உறுப்பு தானம் தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அவர்களின் சம்மதத்தைத் தொடர்ந்து, சிறுமி நய்னா தாக்கூரின் சிறுநீரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு, நீண்ட காலமாக டெர்மினல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த இரண்டு நோயாளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்க்கை கிடைத்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்ட கார்னியாக்கள், இரண்டு கண் பார்வையற்ற நோயாளிகளுக்கு பார்வையை கொடுத்துள்ளன” என்றார்.

