பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி... வெளியானது மெனு!!
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி... வெளியானது மெனு!!

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டதை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
முதற்கட்டமாக 1,145 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 1.5 லட்சம் சிறுவர்கள் பயனடைவர் என்றும், மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் தொலை தூர மலைக் கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்படுவதாகவும், இதற்காக ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் படிப்படியாக தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி வழங்கப்பட உள்ள உணவுப் பட்டியலையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, திங்கட்கிழமை உப்புமா வகைகள், செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள், புதன்கிழமை பொங்கல் வகைகள், வியாழக்கிழமை உப்புமா வகைகள், வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பு வகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in