பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் கஞ்சா கடத்தல்!!
பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் கஞ்சா கடத்தல்!!

கோவையில் பத்திரிகையாளர் அடையாள அட்டையுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை அஜ்ஜனூர் பிரிவு அருகே வடவள்ளி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பத்திரிகையாளர் போல பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வந்த காரை மடக்கி காவல் துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது, காரில் சுமார் 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பி.என்.புதூரைச் சேர்ந்த சரவணன் (38) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா (22) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட சரவணன் ஓட்டுநர் வேலை பார்த்து வருவதாகவும், ஆனால், காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டியதோடு ஆரம்பம் மலர் என்ற வார பத்திரிகையின் உதவி ஆசிரியர் என அடையாள அட்டையை வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in

