ஜாதி, மதம் அற்றவர்.. சிவகாசி தம்பதிக்கு சான்றிதழ்..!
ஜாதி, மதம் அற்றவர்.. சிவகாசி தம்பதிக்கு சான்றிதழ்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர்குளத்தை சேர்ந்த தம்பதி கார்த்திகேயன் (35), ஷர்மிளா (30). இவர்களுக்கு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்று வழங்கப்பட்டது.
கார்த்திகேயன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். ஷர்மிளா குடும்பத்தலைவி. ஒரே சமூகத்தைச் சேர்ந்த, நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்த இந்த தம்பதியினர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்று கேட்டு விண்ணப்பித்தனர். இவர்களுக்கு, தாசில்தார் லோகநாதன் ‘ஜாதி மதம் அற்றவர்’ என்று சான்று வழங்கினார்.
இதுகுறித்து கார்த்திகேயன் கூறியதாவது; “எனது குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கு சென்றபோது என்ன ஜாதி எனக் கேட்டனர். அதைக் குறிப்பிட மறுத்துவிட்டேன்.
எனவே ஜாதி, மதம் அற்றவர் சான்று வாங்குவதற்காக தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தேன். உடனடியாக கிடைக்கவில்லை.
ஏற்கனவே இந்தியாவில் ஜாதி, மதம் அற்றவர் சான்று வாங்கிய 7 பேர் குறித்த ஆவணங்களோடு சென்றேன். பல்வேறு விசாரணை, இதில் உடன்பாடு உள்ளதா எனக் கேட்ட பின்னரே எனக்கும், என் மனைவிக்கும் ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து, எனது இரு குழந்தைகளுக்கும் ஜாதி, மதம் அற்றவர் சான்று விண்ணப்பித்துள்ளேன். அதை வைத்து பள்ளியில் சேர்க்க உள்ளேன்.
இந்தச் சான்றிதழ் பெற்றதால் அரசின் சலுகைகள் எனக்கும், எனது வாரிசுகளுக்கும் கிடைக்காது. ஆனால், எனது இட ஒதுக்கீடு மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சான்றிதழை வாங்கியுள்ளேன்” என்றார்.

