தமிழகத்திலும் மாற்றம் வரும்.. நயினார் நாகேந்திரன் ஆரூடம்..!
தமிழகத்திலும் மாற்றம் வரும்.. நயினார் நாகேந்திரன் ஆரூடம்..!

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழக அரசு வீட்டு வரியை உயர்த்தி மூச்சுவிடும் நேரத்தில் மின்சார கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.
இதற்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார் என்றால், ‘மத்திய அரசு உயர்த்த சொன்னதால் தான் மின்கட்டணத்தை உயர்த்தினோம்’ என கூறுகிறார்.
மத்திய அரசானது எந்த காலகட்டத்திலும் அப்படி சொல்லாது. மத்திய அரசாங்கம் என்ன கூறியுள்ளது என்றால், தமிழகத்தில் 22 சதவீதம் லைன் லாஸ் ஆகிறது. அதை குறைக்க வேண்டும்.
அது போல், கடனையும் குறைப்பதற்காக முயற்சிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. வீட்டு வரியை உயர்த்தவோ, மின்கட்டணத்தை உயர்த்தவோ மத்திய அரசு கூறவில்லை.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்ன மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்றதை இதுவரை கொடுக்கவில்லை.
ஆனால், நல்ல திட்டமான பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். இப்படி மக்களை ஏமாற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது.
இன்னும் இரண்டு வருடத்தில் வரும் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின் மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.

