சென்னை டூ மாமல்லபுரம் இலவச பஸ்கள்.. வரும் 25-ம் தேதி முதல் தொடக்கம்..!
சென்னை டூ மாமல்லபுரம் இலவச பஸ்கள்.. வரும் 25-ம் தேதி முதல் தொடக்கம்..!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது.
இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பது வரலாற்றுக்குரிய நிகழ்வாகும். இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்திட தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு இலவச பஸ்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்குகிறது.
அதன்படி, வருகிற 25-ம் தேதி முதல் 5 பஸ்கள் மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்லும். 1 மணி நேரத்துக்கு ஒரு தடவை இலவச பஸ்களின் சேவை இருக்கும்.
சென்னை மத்திய கைலாஷில் இருந்து இயக்கப்படும் இந்த பஸ்கள் ராஜீவ்காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து ஈ.சி.ஆர். சாலை வழியாக மாமல்லபுரத்தை சென்றடையும். இந்த பஸ்கள் எஸ்.ஆர்.பி.ஸ்டூல்ஸ், பி.டி.சி. குவார்டர்ஸ், முட்டுக்காடு உள்ளிட்ட 19 இடங்களில் நின்று செல்லும்.
இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘செஸ் ஒலிம்பியாட் போட்டியைக் காண ஏராளமானோர் மாமல்லபுரம் வருவார்கள். அவர்களின் வசதிக்காக இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. போட்டி முடியும் வரை இந்த பஸ் சேவை இருக்கும்’ என்றார்.

