பிரதமரை சந்திக்க முதல்வருக்கு பயம்.. பாஜக பிரமுகர் விமர்சனம்..!
பிரதமரை சந்திக்க முதல்வருக்கு பயம்.. பாஜக பிரமுகர் விமர்சனம்..!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்பதற்காக பேகம் பட் விமான நிலையத்திற்கு இன்று சென்றார். அவருடன் மற்ற அமைச்சர்களும் சென்றனர்.
இதே விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன் இந்த வரவேற்பு நடந்துள்ளது. எனினும், பிரதமரை வரவேற்க தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் ஒரே ஒரு அமைச்சர் அனுப்பி வைக்கப்பட்டார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தெலுங்கானா அமைச்சர்களில் ஒருவரான ஸ்ரீனிவாச யாதவ் கூறும்போது, “ஏன் பிரதமரை வரவேற்க ராவ் செல்ல வேண்டும்..?
விதிகளின்படி, ஒரு மாநில பிரதிநிதி சென்று வரவேற்பு அளிக்க வேண்டும். அதனால், ஒரு அமைச்சராக நான் சென்று அவரை வரவேற்றேன்” எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி பாஜக எம்எல்சி ராமசந்திர ராவ் கூறும்போது, “பிரதமர் அல்லது ஜனாதிபதி விமான நிலையத்திற்கு வருகிறார் என்றால், அவரை அந்த மாநில முதல்வர் நேரில் சென்று வரவேற்க வேண்டும். இதுவே விதிமுறை. அதை மீறுவது என்பது முறையாகாது.
நாம் பிரதமரை மதிக்க வேண்டும். அவர், பாஜகவுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் பிரதமராக இருக்கிறார். பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பயம்” என்று ராமசந்திர ராவ் கூறியுள்ளார்.

