இடதுசாரி கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றவர்.. நடிகர் ‘பூ’ ராமுவுக்கு முதல்வர் இரங்கல்..!
இடதுசாரி கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றவர்.. நடிகர் ‘பூ’ ராமுவுக்கு முதல்வர் இரங்கல்..!

திடீர் மாரடைப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல குணச்சித்திர நடிகர் ‘பூ’ ராமு, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இந்நிலையில், நடிகர் ‘பூ’ ராமுவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “தனது நடிப்பால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் கொண்ட ராமு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
![]()
நடிகர் தோழர் பூ ராமு வீதி நாடகக் கலைஞராக இடதுசாரி கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்ற அவரது பணியை முற்போக்காளர்கள் என்றும் நினைவுகூர்வார்கள்.
‘பூ’ திரைப்படத்தின் வழியாக தனது நடிப்பாற்றலால் திரையுலகில் தடம் பதித்த அவர், ‘நெடுநல்வாடை’, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற திரைப்படங்கள் வழியாகத் தனக்கென மக்களின் மனங்களில் தனியிடம் பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.
தனது பயணத்தை நிறைவு செய்து கொண்ட தோழர் ‘பூ’ ராமு அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக கலைஞர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

