நடிகர் அமிர்கானுக்கு நன்றி கூறிய முதலமைச்சர்.. பலரும் பாராட்டு !!
நடிகர் அமிர்கானுக்கு நன்றி கூறிய முதலமைச்சர்.. பலரும் பாராட்டு !!

அசாம் மாநிலத்தில் இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பிரம்ம புத்ரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதில் சுமார் 45 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்திய மாநில மீட்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் மற்றும் உணவு பொட்டலங்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் விநியோகம் செய்யப்படுகின்றன. அசாம் வெள்ள நிவாரணத்திற்கு பல்வேறு தரப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிர் கான் ரூ. 25 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, முன்னணி பாலிவுட் நட்சத்திரமான அமிர் கான் அசாம் மாநில வெள்ள நிவாரண நிதியாக ரூ. 25 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். மக்கள் நலன் கருதி அவர் செய்திருக்கும் மகத்தான உதவிக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமிர்கான் தற்போது லால் சிங் சத்தா என்ற படத்தை முடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தங்கல் படத்திற்கு பின்னர் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் ஆமிர் கான் நடித்திருந்தார். இந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், லால் சிங் சத்தா திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெரும் என்று திரைத்துறையினர் கணித்துள்ளனர்.
newstm.in