எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படும்.. முதல்வர் தகவல்..!
எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படும்.. முதல்வர் தகவல்..!

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் 148 முன் மழலையர் ஆசிரியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு புதுச்சேரியில் 85 பேருக்கும், காரைக்காலில் 63 பேருக்கும் பணி ஆணைகளை வழங்கினர்.

இதன்போது, முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரி அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது.
அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரமும் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் இளநிலை, முதுநிலை எழுத்தர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.
பள்ளிக் கல்வித்துறையில் முன் மழலையர் பள்ளியில் 148 ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் திங்கட்கிழமை முதல் மழலையர் பள்ளி திறக்கப்பட்டு செயல்படும்.
மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் இயக்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியில் பொதுத்தேர்வு நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.

