பழங்குடியினருக்காக போராடிய ஆசிரியை மகாலட்சுமி மீது புகார்..!!
பழங்குடியினருக்காக போராடிய ஆசிரியை மகாலட்சுமி மீது புகார்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சேவத்தான். பழங்குடியினத்தை சேர்ந்த இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், சுதா, அசோக், அஜித், சிவகாசி, சுஹாசினி என 5 பிள்ளைகளும் உள்ளனர். இதில், சிவகாசி அங்குள்ள ஜமுனா மரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
அரசு விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதியன்று அப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி என்பவர் சிவகாசியின் தந்தை செவத்தானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சிவகாசியின் முகம் வீங்கி உள்ளதாகவும் உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, செவத்தான் தனது மகன் சிவகாசியை நம்பியந்தல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிவகாசிக்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் மாணவனின் உடல்நிலை மேலும் மோசமானதால் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, மாணவனின் பெற்றோர் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “தன் மகன் இறப்பிற்கு ஆசிரியை முகப்பரு ஊசியை வைத்து சுத்தம் செய்ததே காரணம். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ஆசிரியை மகாலட்சுமிடம் கேட்ட பொழுது, “மாணவனுக்கு முகத்தில் சூடு கட்டி வந்துள்ளது. நான் துடைத்து விட்டேன். பிறகு அவனுக்கு முகம் வீங்கியதால் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தேன். ஜவ்வாது மலையில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டுபவர் என்பதால் அரசியல்வாதிகளுக்கு என்னை பிடிப்பதில்லை. அதனால் என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு என் மீது பழி போடுகின்றனர்” என்றார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மட்டும் நடைபெற்று வருகிறது. ஆசிரியை மகாலட்சுமி மலைவாழ் பள்ளியில் சிறந்த சீர்திருத்தங்களை செய்து சிறந்த சேவை செய்வதாக அரசின் சார்பில் பல விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் மலைவாழ் மக்களின் நலனுக்காக தனியாளாக அவர்களிடம் பேசி அவர்களுடைய பிள்ளைகளை உண்டு உறைவிட பள்ளியில் சேர்க்க முயற்சிகளை எடுத்து பல மாணவர்களை சேர்த்துள்ளார்.
இவர் கடந்த 14 ஆண்டுகளாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மலைவாழ் குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு பணிகளை செய்துவருகிறார். மாணவர்களுக்கு கல்வியுடன் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்டவற்றையும் கற்பித்து ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வந்தார். அரசு தனக்கு கொடுக்கும் ஊதியம். தன்னார்வலர்களிடம் திரட்டப்படும் நிதி ஆகியவற்றை கொண்டு மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை பள்ளியில் அவரே ஏற்படுத்தியது பாராட்டப்பட்டது. இவர் ராதிகா நடத்திய கோடீஸ்வரி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கிடைக்கும் வருவாய் மூலம் மலைவாழ் மக்களுக்கு உதவி செய்ய போவதாக தெரிவித்திருந்தார்.

