பொதுக்குழுவில் நடந்த மோதல்.. ஓபிஎஸ், இபிஎஸ்சை தனித்தனியே சந்தித்த பாஜக தலைவர்
பொதுக்குழுவில் நடந்த மோதல்.. ஓபிஎஸ், இபிஎஸ்சை தனித்தனியே சந்தித்த பாஜக தலைவர்

சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடிந்தது. இந்த பொதுக்குழுவில் வாழ்க முழக்கத்தைவிட ஒழிக முழக்கம்தான் அதிகம் கேட்டது. ஏனெனில் கூட்டம் தொடங்கியது முதல் ஒருதரப்பினர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. ஒருகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வெளியேறிய நிலையில், அவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டிலை வீசியெறிந்தனர்.
மொத்தத்தில் பெரும் குழப்பத்தில் சச்சரவில் முடிந்ததது அதிமுக பொதுக்குழு. பொதுக்குழு முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்ததில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக சார்பில் ஓடிசா மாநிலத்தைச் சார்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். அவர், ஏற்கெனவே ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர். இதனையடுத்து, பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் தமிழ்நாட்டில் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பாமக அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தமிழக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று சந்தித்துள்ளனர். அந்தச் சந்திப்பின்போது, திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கைவைத்தனர். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினர்.

ஆனால் இன்னும் வேட்புமனுகூட தாக்கல் செய்யாத நிலையில், சுமார் இருபது நாட்கள் இருக்கும் சூழலில் அதிமுகவில் குழப்பமான சூழலில் ஆதரவைசென்று கேட்கவேண்டுமா என கேள்வி எழுந்துள்ளது. மேலும் கட்சியில் முதன்மையானவர் என்றால் ஓ.பன்னீர்செல்வம் தான். அவரிடம் சென்று முதலில் கேட்காமல் எடப்பாடியை அண்ணாமலை சந்தித்ததும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதன்மூலம் பாஜக, அதிமுக விவகாரங்களில் தலையீடுவது அம்பலமாகியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
newstm.in

