கருத்தடை செய்துக்கோங்க.. ரூ.10 லட்சம் கடனா பெறுங்க.. அழைக்கிறார் கலெக்டர்..!
கருத்தடை செய்துக்கோங்க.. ரூ.10 லட்சம் கடனா பெறுங்க.. அழைக்கிறார் கலெக்டர்..!

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு தொழில் தொடங்க 10 லட்சம் ரூபாய் வரை வங்கி கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மற்றும் குளித்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘தங்க தந்தை’ திட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடக்கிறது.
அதன்படி இன்று (13-ம் தேதி) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மே 27-ம் தேதி குளித்தலை அரசு மருத்துவமனையிலும் குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் நடக்கிறது.
குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஏற்கும் ஆண்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும். தகுதி அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா, வீட்டில் உள்ள முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை, சிறு, குறு நடுத்தர தொழில் தொடங்க 10 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள், இலவச கால்நடை கொட்டகை, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்துடன் நுண்ணீர் பாசனம் போன்ற திட்டங்களில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய 94439-42304, 99445-23334 மற்றும் 94439-04031 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

