உக்ரைன் தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறப்பு..!!
உக்ரைன் தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறப்பு..!!

சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோனை வழங்கும் மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதன்படி, 104 என்ற எண்ணை தொடர்புகொண்டு உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாணவர்கள் இலவச ஆலோசனை பெறலாம் என்றும் கூறினார்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“உக்ரைனில் மருத்துவ கல்வி படித்து வரும் மாணவர்களின் எதிர்கால மருத்துவ படிப்பை தொடர்வதற்கு ஒன்றிய அரசு உதவிட வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இவர்களை சேர்க்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
உக்ரைன் - ரஷ்யா போரால் உடனடியாக மீண்டும் உக்ரைனுக்கு சென்று தங்களது மருத்துவ படிப்பை தொடர்வது இயலாத காரியம் என்பதால், அவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்ததாக கூறினார். இதனால் நிச்சயம் ஒன்றிய அரசு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறினார்.
இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போரால் தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக மன ஆலோசனை என்பது அவசியமானது எனவும் தமிழ்நாட்டு மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 20 மனநல ஆலோசகர்கள் 1,456 மாணவ, மாணவிகளுடன் தொடர்புகொண்டும், அவர்களின் பெற்றோர்களிடமும் பேசி உரிய ஆலோசனை வழங்குவார்கள் என தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் படிப்பை தொடர் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து டெல்லி வரும் மாணவர்கள் சென்னை அழைத்துவரப்படுகிறார்கள். இதுவரை 1,456 மாணவர்கள் உக்ரைனில் இருந்து தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

