கொரோனா வழக்குகள் ரத்து… தமிழக டிஜிபி அதிரடி!!
கொரோனா வழக்குகள் ரத்து… தமிழக டிஜிபி அதிரடி!!

கொரோனா ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
2019 -20ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவியபோது ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், இ-பாஸை முறைகேடாகப் பயன்படுத்தியவர் என அதிமுக ஆட்சியில் சுமார் 10 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு கொரோனைவை கட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கொரோனா காலத்தில் உத்தரவை மீறியதாகப் போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இதற்கான அரசாணையும் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில் கொரோனா ஊரடங்கு விதிமீறல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு சென்னை தவிர அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பியவர்கள் என சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டுக் குறிப்பிட்ட குற்றங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது, மற்றும் காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்களின் நலன் கருதிக் கைவிடப்படுகின்றது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in

