இரும்பு கோட்டையை தகர்த்த கொரோனா.. வடகொரியாவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு பாசிட்டிவ்
இரும்பு கோட்டையை தகர்த்த கொரோனா.. வடகொரியாவில் ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு பாசிட்டிவ்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வந்தாலும் அதில் இருந்து தப்பிவந்த சில நாடுகளில் முக்கியமானது வடகொரியா. இரண்டு ஆண்டுகளாக கொரோனா என்ற பேச்சே இல்லாமல் இருந்தது. அந்நாட்டு மக்கள் கொரோனா தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் எனக்கு ஏது கேட் என சொல்லும்வகையில், அங்கும் கொரோனா வைரஸ் புகுந்து விட்டது. கடந்த 12ஆம் தேதி வடகொரியாவின் பியாங்யாங் நகரில் நடந்த ஆளும் கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் இதை அந்த நாட்டின் தலைவர் கிம்ஜாங் அன் அறிவித்து, உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கத்தையும் அமல்படுத்தி உள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் கொரோனா பரவல் பேரழிவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். கடந்த மாதம் முழுவதும் நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அங்கு அதிகரிக்கத்தொடங்கியது. அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்தான் ஒமைக்ரான் வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலை அங்கும் தன் கைவரிசையை காட்டத்தொடங்கி இருப்பது உறுதியானது.
அத்துடன் அங்கு போதுமான மருத்துவ வசதிகளும் இல்லை. தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் அதிபர் கிம் ஜாங் உன் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார். அதேநேரம் வடகொரியாவுக்கு தேவைப்படும் மருந்தை வழங்கம் தயாராக இருப்பதாக சீனாவும், தென்கொரியாவும் தெரிவித்துள்ளன. ஆனால் வடகொரியா தொடர்ந்து மவுனம் சாதித்துவருகிறது.
இந்த நிலையில் 12ஆம் தேதியில் இருந்து 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர். வடகொரியாவில் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 60 லட்சம் என கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில் 3,92,920 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருந்துகளை உடனடியாக விநியோகம் செய்ய அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
newstm.in