நீதிமன்றம் அதிரடி! ஆர்டர்லிகளை திரும்பப் பெற உத்தரவு!!
நீதிமன்றம் அதிரடி! ஆர்டர்லிகளை திரும்பப் பெற உத்தரவு!!

காவலர் பயிற்சி பெற்றவர்களை ஆர்டர்லிகளாக நியமிப்பது குற்றம் என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் அரசு நடவடிக்கை எடுப்பது குறித்தும், பிரச்னைக்கு தீர்வு காணவும், அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

அரசு தரப்பில் ஆர்டர்லி முறை குறித்து கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளதாகவும். காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சரும் கூட்டங்கள் நடத்தியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அரசின் விளக்கம் திருப்தி அளிப்பதாக தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறையில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றமாகும். படித் தொகையை பெற்றுக்கொண்டு, வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் காவல்துறையின் தற்போதைய அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
newstm.in

