குவியும் பாராட்டுக்கள்..!! குழந்தைக்கு சாதி, மதத்தைச் சாராத சான்றிதழ் பெற்ற தந்தை!!
குவியும் பாராட்டுக்கள்..!! குழந்தைக்கு சாதி, மதத்தைச் சாராத சான்றிதழ் பெற்ற தந்தை!!

கோவையை சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக் (33). இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், வில்மா(4) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி காயத்ரி கோவை ரயில்வே அலுவலகத்தில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
தங்களது குழந்தையை சாதி, மதத்திற்குள் சேர்க்காமல் வளர்க்க வேண்டுமென இருவரும் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் தனது குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிடவில்லை. இதனால் பள்ளியில் அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் சாதி இல்லை, மதமும் இல்லை என்ற சான்றிதழுக்காக நோட்டரி கடிதத்துடன் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்துள்ளனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடமும் இது குறித்து தெரிவித்து, இந்த சான்றிதழ் எடுப்பதால் அரசு சார்பில் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் எந்தவித சலுகைகளையும் கோரமாட்டேன் என்ற உறுதிமொழி அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கோவை வடக்கு வட்டாட்சியர் மூலம் நரேஷ் கார்த்திக் - காயத்ரி தம்பதியினரின் குழந்தைக்கு எந்த சாதிப் பிரிவையும் சாராதவர் எனவும்; எந்த மதப்பிரிவினரையும் சாராதவர் எனவும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நரேஷ் கார்த்திக் கூறுகையில், “பெற்றோர் தங்களது குழந்தைகளின் சாதி, மதம் குறித்து குறிப்பிடத் தேவையில்லை என, 1973-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து பல பள்ளிகளுக்கும் தெரியாமல் இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம். வருவாய்த் துறையினரை சந்தித்து பேசியபோது, அவர்களுக்கும் இதுகுறித்து தெரியவில்லை. கோவை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டபோது அவர் வடக்கு வட்டாட்சியரை தொடர்புகொள்ள அறிவுறுத்தினார். அதன் பின்னரே சான்றிதழ் கிடைத்து. புதிய நடைமுறை என்பதால் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இனிவரும் குழந்தைகளுக்கு சான்றிதழ் எளிதில் கிடைக்கும்.” என்று கூறினார்.
குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் என சான்றிதழ் பெற்ற இந்த தம்பதியினருக்கு சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

