கடன் தொல்லை.. பழநி விடுதியில் கேரள தம்பதி விபரீத முடிவு !!
கடன் தொல்லை.. பழநி விடுதியில் கேரள தம்பதி விபரீத முடிவு !!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலந்தூர் என்ற பகுதியில் சுகுமாறன்- சத்தியபாமா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் பழநி அடிவாரத்தில் உள்ள விடுதி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கினர். அப்போது, கேரளாவில் இருந்து கோவிலுக்கு செல்வதற்காக வந்து தங்குவதாக முன்பதிவு செய்யும் இடத்தில் கூறினர்.
இந்நிலையில், இந்த விடுதிக்கு கேரளாவைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் நள்ளிரவு அழுதவாறு வந்தனர். இதுகுறித்து விடுதி ஊழியர்கள் கேட்டபோது, விடுதியில் தங்கியுள்ள கணவன், மனைவியான சுகுமாறன், சத்ய பாமா இருவரும் தங்களது உற வினர்கள் என்றும், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனை கேட்ட விடுதி ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். பின்னர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதுவரை அறையை திறக்கக்கூடாது என்று விடுதி ஊழியர்கள், தம்பதியின் உறவினர்களிடம் கூறினர்.
பின்னர் போலீசார் முன்னிலையில் அறை திறக்கப்பட்டது. அப்போது கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்னர் அந்த அறையில் இருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், தங்களது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. வங்கி கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக மலையாளத்தில் எழுதியிருந்தது. மேலும் தற்கொலைக்கு முன்பாக தங்கள் முடிவை அவர்கள் வாட்ஸ்அப் மூலம் உறவினர்களுக்கும் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள போலீசாருக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்து புகார் அளித்துள்ளனர்.
newstm.in

