அண்ணாமலை அப்படி பேசினாரா? - கலக்கத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் போர்க்கொடி !
அண்ணாமலை அப்படி பேசினாரா? - கலக்கத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் போர்க்கொடி !

தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்புடன் பரபரப்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஆளும் திமுக வெற்றியை குவித்துள்ளது. அதிமுக படு தோல்வியடைந்தது.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து களம் கண்ட பாஜகவுக்கும் தோல்வி முகம்தான். ஆனால், தாங்கள் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியினர் கூறிக் கொள்கின்றனர். வாக்கு சதவீதத்தின்படி பார்த்தால் அது நகை முரண் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த தேர்தலில் மொத்தமுள்ள 12,838 இடங்களில் 5,594 இடங்களில் பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 308 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, தோல்வி தொடர்பான பாஜகவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. அதில், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது நிர்வாகிகளை அண்ணாமலை கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தாத மாவட்ட தலைவர்கள், தாங்களாகவே விலகி விடுங்கள்; இல்லாவிட்டால் நானே நீக்குவேன் என அண்ணாமலை பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தமிழக பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் கூட வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் போனது குறித்து அண்ணாமலை அதிருப்தியில் உள்ளார். பல மாவட்டங்களில் நடக்கும் மோசமான நிகழ்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஒரு மாவட்டத்தில் 20 சதவீதத்துக்கும் குறைவான வேட்பாளர்களை நிறுத்திய மாவட்ட மற்றும் மண்டலத் தலைவர்கள் இந்த பட்டியலில் இருக்கின்றனர் என்றார்.
திமுகவின் வெற்றிக்கு அதிகார பலம், பண பலம் காரணம் என கூட்டத்தில் கலந்து கொண்ட சில மாவட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், சென்னை மாநகராட்சியின் 134ஆவது வார்டில் நம் வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். அதற்கு அவரின் கடும் உழைப்பே காரணம். கட்சியினர் அனைவரும் மக்களுடன் தினமும் நேரடியாக பழகி, கட்சியை வளர்க்க கடுமையான உழைப்பை தர வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கும். இந்த மனநிலை மக்களவை தேர்தலின்போது மாறும், என அண்ணாமலை பேசியதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கட்சி பணியில் சரிவர செயல்படாத பகுதி நிர்வாகிகளை மாவட்ட தலைவர்களே மாற்றி கொள்ளலாம்; உள்ளூர் பிரச்னைகள் தொடர்பாக தாங்களே போராட்டங்களை அறிவிக்கலாம் என்றும் அண்ணாமலை அக்கூட்டத்தில் பேசியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
அதேசமயம், அண்ணாமலையின் இந்த மிரட்டல் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் செயல்பாட்டை இரண்டு பெரிய திராவிட கட்சிகளுடன் ஒப்பிடுவது அரசியல் ரீதியாக விவேகமற்றது என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாவட்ட மற்றும் மண்டலத் தலைவர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் கூறியிருப்பது ஜனநாயக விரோதமானது. இது அவர்களின் மன உறுதியைக் குலைத்து, கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும். போலீஸ் பணியில் இருந்த அண்ணாமலை அங்கு செயல்பட்டது போல் இங்கு செயல்பட முடியாது. இது அரசியல் கட்சி; மிரட்டல் எல்லாம் இங்கு வேலைக்காகாது, இங்கு வேறு விதமாக முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்றார்.
மாவட்டத் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த வேண்டும். விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை பணி நீக்கம் செய்வது பிரச்சினையை உருவாக்கும் என்றார்.
இதற்கிடையே, தனக்கு நெருக்கமானவர்களை முக்கியப் பதவிகளில் நியமிப்பதுதான் அண்ணாமலையின் திட்டம் என்று அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சித் தலைவர் 2024 மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவைத் தயார்படுத்தி வருவதாகவும், அதன் வளர்ச்சிக்கு பங்களிக்காமல் கட்சிப் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் கடின உழைப்பாளிகளுக்கு வழிவிட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த சலசலப்புகள் குறித்து அண்ணாமலை பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். கட்சியின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து விளக்கம் அளிப்பார் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறும்போது, மாநிலத் தலைவரின் செய்தி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. செயல்படத் தவறிய மண்டலத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டத் தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டார். மாவட்டத் தலைவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்களை பதவி நீக்கம் செய்வது குறித்து மாநில தலைவர் பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
newstm.in

