லஞ்சத்தில் டிஸ்கவுன்ட்.. கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்..!
லஞ்சத்தில் டிஸ்கவுன்ட்.. கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்..!

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
அந்த சங்கத்தில், 311 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
அப்போது, அந்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் கோவிந்தன் (50) என்பவர், ‘நாமக்கல் அலுவலகத்திற்கு 2000 ரூபாய் தர வேண்டி இருப்பதால் அத் தொகையை தரவேண்டும்’ என்று சில பயனாளிகளிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக அவர் ஒரு பயனாளியிடம் ‘மற்றவர்களுக்கு 6000 ரூபாய் வாங்குவதாகவும், நீங்கள் எனது உறவினர் என்பதால் 2000 ரூபாய் கொடுத்தால் போதும்.
உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், வற்புறுத்தல் இல்லை; விரும்பினால் தரலாம்’ என கோவிந்தன் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.
இதையடுத்து கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள், பேளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு வந்து அந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சங்க செயலாளர் கோவிந்தன் பயனாளிகளிடம் லஞ்சம் கேட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

