நடிகர்களின் இந்த விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.. டிஜிபி அறிவுரை !!
நடிகர்களின் இந்த விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.. டிஜிபி அறிவுரை !!

இன்றைய கால இளைஞர்கள் எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மோகத்தில் இருக்கின்றனர். இதன் கோரமுகம் சில நேரங்களில் அவர்களின் உயிரையும் பறித்துவிடுகிறது. அதாவது, வீட்டில் இருந்தே ஆன்லைனில் விளையாடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடிகளில் சிக்குகின்றனர். மேலும் கடன்வாங்கியும் அதில் செலவிட்டு மனவேதனையில் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பான புகார்களும், இதனைத் தடுக்க பல்வேறு கோரிக்கைகளும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ரம்மி நிறுவனங்கள் மேலமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த சட்டத்திற்கு தடைபெற்றனர். இதையடுத்து மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மியில் வரும் நடிகர்களின் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சமீப காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிடித்த நடிகர்கள் ரம்மி விளம்பரங்களில் வருவதைப் பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்.

இது ஆன்லைன் ரம்மி அல்ல, மோசடி ரம்மி. ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்பப் பிரச்னை மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம், என அந்த வீடியோவில் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in

