பேருந்துகளில் பாட்டுப் போடக் கூடாது.. நிர்வாகம் புதிய உத்தரவு !!
பேருந்துகளில் பாட்டுப் போடக் கூடாது.. நிர்வாகம் புதிய உத்தரவு !!

அரசுப் பேருந்துகளில் சத்தமாக பாடல்களை ஒலிபரப்புவதற்கு மாநகர போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.
பேருந்துகளில் சத்தமாக திரைப்பட பாடல்களை ஒலிபரப்புவதன் மூலம், பேருந்து நிறுத்தம் குறித்து நடத்துனர் கூறுவது பயணிகளுக்கு சரியாக கேட்பதில்லை, சில நேரங்களில் பயணிகளுக்கு அமைதியை கெடுக்கிறது, இரைச்சலை ஏற்படுத்துகிறது என புகார் எழுந்தது.
இதுமட்டுமின்றி பேருந்து நிறுத்தம், வழித்தடம், கட்டணம் உள்ளிட்டவை குறித்து பயணிகளுக்கு உள்ள சந்தேகங்களை நடத்துனரிடமோ அல்லது சக பயணியிடமோ கேட்டு விளக்கம் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், அதிக சத்தத்துடன் பாடல்களால் ஒலிக்கும்போது, அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து வரும் முக்கியமான அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றும் புகார்கள் கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் ஒரு சில பேருந்து ஓட்டுனர்கள் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களை ஒலிபரப்புகின்றனர். இதனால், இரவு நேரங்களில் பயணிக்கும் பெண் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓட்டுனர்கள் தங்களது நீண்ட நேரப் பணியின் இடையே இளைப்பாறுதலாக பாடல்களைக் கேட்டாலும், பயணிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால், மாநகரப் பேருந்திகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை நீக்க வேண்டும் என அனைத்து பணிமனைகளுக்கும் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதனிடையே பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஒலிப்பெருக்கி மூலம் பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் அம்சத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக 500 பேருந்துகளில் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அம்சம் விரைவில் 3,300 பேருந்துகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட சத்தமாக பாடல்களைக் கேட்பதற்கு கர்நாடக அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in

