தஞ்சை தேர் விபத்தில் 200 பேரை காப்பாற்றிய மின்வாரிய ஊழியர்..!
தஞ்சை தேர் விபத்தில் 200 பேரை காப்பாற்றிய மின்வாரிய ஊழியர்..!

தஞ்சை அருகே உள்ள களிமேட்டில் நேற்று நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்தனர்; 17 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், இந்த விபத்தின்போது மேலும் உயிர் பலியை தடுத்து 200 பேரை காப்பாற்றிய மின்வாரிய ஊழியர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
களிமேட்டை சேர்ந்தவர் திருஞானம் (36). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தார்.
அப்போது, பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடியவர், சூழ்ந்திருந்த தண்ணீரில் மின்சாரம் பரவியதை உணர்ந்து கொண்டார். தண்ணீரை மிதித்ததில் அவருக்கும் காயம் ஏற்பட்டது.
தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் பொது மக்களை காப்பாற்ற முடிவு செய்து, உடனடியாக தஞ்சையில் உள்ள உயர் மின்வாரிய அதிகாரிகளுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். மேலும், சக ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் நிலைமையை உணர்ந்துகொண்ட உயர் அதிகாரிகள் தஞ்சையில் இருந்தவாறே களிமேட்டுக்கு செல்லும் உயர்அழுத்த மின்பாதை இணைப்பு வோல்டேஜை துண்டித்தனர்.
இதனால் மேலும் மின்சாரம் வருவது தடுக்கப்பட்டது. இதன் மூலம் திருஞானம் 200-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி உள்ளார்.
தற்போது அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மட்டுமின்றி சிகிச்சை பெறும் அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.

