திருமண மண்டபத்திற்குள் வைத்து திமுகவினரை பூட்டியதால் பரபரப்பு!!
திருமண மண்டபத்திற்குள் வைத்து திமுகவினரை பூட்டியதால் பரபரப்பு!!

கோவை மாநகராட்சி 63 வது வார்டில் திமுக சார்பில் சாந்தி முருகனும், அதிமுக சார்பில் லதா திருமுகமும், பாஜக சார்பில் கவிதா ராஜனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் திமுகவினர் பூத் ஸ்லிப்புடன் பணம் கொடுப்பதாக கூறி பா.ஜ.க மற்றும் அதிமுகவினர் திருமண மண்டபம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமண மண்டபத்திற்குள் 200க்கும் மேற்பட்ட மக்கள் இருந்த நிலையில் பொதுமக்களையும், திமுகவினரையும் திருமண மண்டபத்திற்குள் வைத்து முன்புற கதவினை பா.ஜ.க வேட்பாளர் கவிதா ராஜனும், அதிமுகவினரும் பூட்டினர்.

இதனையடுத்து திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வது குறித்து பா.ஜ.க மற்றும் அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.இரு கட்சியினரும் திருமண மண்டபத்திற்கு முன்பு காத்திருந்த நிலையில் திமுகவினர் திருமண மண்டபத்தில் பின்புற வாசல் கதவை திறந்து விட்டு பொதுமக்களை வெளியேற்றினர்.
பொது மக்கள் கூட்டமாக பின்புற வாசல் வழியாக வெளியேறிய நிலையில் அவர்களை பாஜக மற்றும் அதிமுகவினர் தடுத்தனர். பொதுமக்களை தடுத்த பாஜக, அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே லேசான வாக்குவாதம், தள்ளு முள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அருகில் இருந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் அவர்களை சமாதானப்படுத்தினர்.அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரும் முன் பொதுமக்களும், திமுகவினரும் கலைந்து சென்ற நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து பறக்கும் படை அதிகாரிகளும் , போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

