செஞ்சியில் பரபரப்பு..!! ஓபிஎஸ் நிகழ்ச்சியில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்!!
செஞ்சியில் பரபரப்பு..!! ஓபிஎஸ் நிகழ்ச்சியில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்!!

செஞ்சி அருகே உள்ள செம்மேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் பெட்ரோல் பங்க் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள், திருமண சீர்வரிசை பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் செஞ்சிக்கு வந்தார்.

பன்னீர்செல்வம் வருகையொட்டி செஞ்சி சங்கராபரணி ஆற்றின் கரை அருகே ஏராளமான பெண்களை அழைத்து வந்து அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் நலத்திட்ட உதவிகளை ஒரு சிலருக்கு மட்டும் வழங்கிய ஓ.பன்னீர் செல்வம், பின்னர் ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், செம்மேடு ஆகிய பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை வழங்க சென்றார்.
இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் எதுவும் பேசாமல் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், செம்மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தென்னை மரக்கன்றுகள், குடம், போர்வை, துணிகள், தலையணை போன்ற பொருட்களை அங்கு திரண்டிருந்த மக்களும், அதிமுகவினரும் மேடைக்கு சென்று அவரவர்களுக்கு வேண்டிய பொருட்களை தூக்கிச் சென்றனர். சிலர் பீரோக்களை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு சென்றனர்.

மேலும் சிலர் மற்றொருவர் கையில் இருந்த பொருளை பிடுங் முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு வந்திருந்த பெண்களும், சிறுமிகளும் கூட்டத்துக்குள் புகுந்து பொருட்களை எடுப்பதற்கு போட்டா போட்டி நடத்தினர். விழாவிற்கு வந்தவர்களுக்கு உணவு வழங்க வைத்திருந்த பிரியாணி அண்டாக்களை அப்படியே தூக்கிச் சென்றனர். இதனால் விழா நடந்த அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

