விலை உயர்ந்த அரிசி, பருப்பு... இன்று முதல் ஜிஎஸ்டி!!
விலை உயர்ந்த அரிசி, பருப்பு... இன்று முதல் ஜிஎஸ்டி!!

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, தானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிப்பதற்கு அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன் காரணமாக, பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு, தயிர், பன்னீா் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் அச்சுப் பிரதி, எழுத அல்லது வரைவதற்கு பயன்படும் இங்க், வெட்டும் கத்திகள், பென்சில் ஷார்ப்னா்கள், எல்இடி விளக்குகள், வரைவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்துக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, சுத்திகரிப்பு ஆலைகள், மயான கட்டுமான பணி ஒப்பந்தங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கி, ஐஆா்டிஏ, செபி போன்ற ஒழுங்கு நடைமுறை அமைப்புகளின் சேவைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. ரூ. 1,000-க்கும் குறைவாக ஒருநாள் வாடகை கொண்ட ஹோட்டல் அறைகள், அட்லஸ், மேப் உள்ளிட்ட வரைபடங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் சோலார் வாட்டா் ஹீட்டா்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு, தயிர், பன்னீா் உள்ளிட்ட பொருள்களுக்கும், ரூ. 5,000-க்கும் மேல் ஒருநாள் வாடகை கொண்ட மருத்துவமனை அறைகளுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

வரி குறைப்பு
சரக்கு மற்றும் பயணிகள் சாலைப் போக்குவரத்து வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளை வாடகைக்கு எடுப்பதற்கு விதிக்கப்பட்டுவந்த 18 சதவீத ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடகை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் பக்தோக்ரா நகரத்திலிருந்து விமானத்தில் ‘எகானமி’ வகுப்பில் பயணிப்பதற்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் பேட்டரி பொருத்தப்பட்ட அல்லது பொருத்தப்படாமல் இருந்தாலும் ஜிஎஸ்டி விதிப்பில் 5 சதவீத சலுகை பெற தகுதி அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in

