கொரோனா பாதித்ததாக பொய் கணக்கு.. டாக்டர், நர்ஸ், போலீஸ் உட்பட 10 பேர் மீது வழக்கு..!
கொரோனா பாதித்ததாக பொய் கணக்கு.. டாக்டர், நர்ஸ், போலீஸ் உட்பட 10 பேர் மீது வழக்கு..!

கொரோனா பாதித்ததாக பொய் கணக்கு காண்பிக்க வாலிபரை வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போலீசார் உட்பட 10 பேர் மீது சொரப் கோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா தேவாதி கொப்பா கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் நாயக். இவர், சொரப் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “கொரோனா பரவிய ஆரம்ப காலமான கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேவாதி கொப்பாவில் உள்ள எனது வீட்டிற்கு சொரப் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அண்டிகே கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் வந்தனர்.
அப்போது அவர்கள் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அதனால் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று கொள்ளும்படி தெரிவித்தனர். ஆனால் நான் உடல் நலத்துடன் இருப்பதாக கூறி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டேன்.
ஆனாலும் அவர்கள் வீட்டில் இருந்து என்னை வலுக்கட்டாயமாக ஓட்டூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஆஸ்பத்திரியில் சில நாட்கள் தங்கவைத்தனர்.
இதனால் மன ரீதியாக நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். எனவே, போலீசார், டாக்டர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரகாஷ் நாயக் மனு மீது விசாரணை நடத்தி சொரப் கோர்ட் நீதிபதி, ‘கொரோனா பாதித்ததாக பொய் கணக்கு காண்பிக்க வாலிபரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஆஸ்பத்திரியில் அடைத்த டாக்டர், செவிலியர், போலீசார் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் சொரப் போலீசார் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

