பிரபல கார் நிறுவனம் மூடல்: அதிர்ச்சியில் ஊழியர்கள்..!!
பிரபல கார் நிறுவனம் மூடல்: அதிர்ச்சியில் ஊழியர்கள்..!!

கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் தமிழகத்தில் தனது தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அதன் பிறகு, சென்னை மறைமலை நகரில் கார் உற்பத்தி தொழிற்சாலையை ஃபோர்டு ஆரம்பித்தது. அங்கு, 1998-ல் உற்பத்தி தொடங்கப்பட்டது.
பின்னர், குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அங்கு சனாந்த் என்ற இடத்தில் தனது இரண்டாவது தொழிற்சாலையை ஃபோர்டு நிறுவியது. சனாந்த்தில் உள்ள தொழிற்சாலை அதி நவீன வசதிகளைக் கொண்டது. அங்கு, உலகத் தரம் வாய்ந்த கார்கள் தயாரிப்பதற்கான வசதிகள் உள்ளன.
இந்த நிலையில், இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்துவது என்றும், இனிமேல் ஏற்றுமதி செய்யப்போவதில்லை என்றும் முடிவெடுத்த ஃபோர்டு நிறுவனம், அதைத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்பதைக் கருத்தில் கொண்டு, சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது குறித்து டாட்டா குழுமத்துடன் தமிழக அரசு கலந்துரையாடியது.
இந்நிலையில், வருகிற ஜூன் 30-ம் தேதியுடன் மறைமலை நகரில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனமான போர்டு நிரந்தரமாக மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு சுமார் 2,500 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த அறிவிப்பு அங்கு பணிபியும் ஊழியர்களிடேயே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நஷ்டத்தில் இருக்கும் இந்திய யூனிட்டை கைவிட்டு, மின்சார மற்றும் தானியங்கி வாகனங்களில் தனது முதலீடுகளை ஃபோர்டு நிறுவனம் அதிகரிக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

